இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர்.சமீபத்தில் 'ஜெய் பீம்' படக்காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலிலும் 'ஜெய்பீம்' திரைப்படம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. மொத்தம் 10 படங்கள் இடம்பெறும் இந்த பட்டியலில் 'ஜெய் பீம்' படம் இடம்பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜாக்குலினின் ட்விட்டர் பதிவு ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் தள்ளியுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகையின் நிருபர் ஒருவர் தொகுப்பாளர் ஜாக்குலினிடம் ட்விட்டரில், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இருக்கும் படங்களில் எது உங்களை வியப்படையச் செய்யும்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு 'ஜெய் பீம்' என அவர் பதிலளித்துள்ளார். இதன் மூலம் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.