Skip to main content

வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Published on 04/03/2022 | Edited on 10/03/2022

 

income tax raid viduthalai movie producer elred kumar house

 

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் எல்ரெட் குமார் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', ஜீவா நடிப்பில் வெளியான 'கோ', கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'யாமிருக்க பயமேன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இவர் பட தயாரிப்பை தாண்டி கல்குவாரி உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார்.

 

எல்ரெட் குமார் தனது வருமானம் தொடர்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரி துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட 250 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடந்த அதிரடி சோதனையில் எல்ரெட் குமாரின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அத்துடன் எல்ரெட் குமாரின் வீட்டில் இருந்து ஏராளமான பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி இருவரும் நடிக்கும் 'விடுதலை' படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 நிமிடம் நிற்காத கைதட்டு - சர்வதேச அரங்கில் ‘விடுதலை’க்கு பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
viduthalai get standing ovation in Rotterdam Film Festival

53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியது. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு கடந்த 30ஆம் தேதி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விழாவின் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்பட தேர்வாகியது. அதன்படி ‘விடுதலை பாகம் 1’ நேற்று (31.02.2024) திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவரும், எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். இதை தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் வருகிற 3ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாகம் 1 கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.