Skip to main content

இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது...? வெளியான புதிய தகவல்

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

indian 2 movie shooting update

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சினைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது. இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக அறிவித்தார். இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

 

இதனிடையே லைகா நிறுவனம் 'இந்தியன் 2' படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் வேறு படத்தை இயக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்பிறகு இயக்குநர் ஷங்கர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் படி உத்தரவிட்டது. அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஷங்கர் வேறு படத்தை இயக்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என லைகா நிறுவனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர்  'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார். 

 

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதால் இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருவதால், அப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு 'இந்தியன் 2' படப்பிடிப்பு கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஷங்கர், ராம் சரண் படத்தை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் பணிகள் முடிந்த பிறகு இருவரும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உத்தம வில்லன் நஷ்டம்...திருப்பதி பிரதர்ஸ் கண்டன அறிக்கை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Thirrupathi brothers about uttama villain issue

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், போஜ குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான், கமலஹாசனை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான  உத்தம வில்லன், எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும். 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசனும் அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான யூட்யூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.