இசைத்துறையில் 50 ஆண்டுகாலம் கடந்து இன்றும் கோலோச்சி நிற்பவர் இளையராஜா. கடந்த மார்ச்சில் லண்டனில் வெற்றிகரமாக சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். இதனை முன்னிட்டும் அவரது 50 ஆண்டு கால திரைப் பயணத்தை கொண்டாடும் வகையிலும் தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே மத்திய அரசால் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வாங்கியுள்ளார். இப்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். 

இந்த நிலையில் இளையராஜா, தனது 50 ஆண்டு கால திரைப்பயணத்தை முன்னிட்டு கர்நாடகா உடுப்பி மாவட்டத்தில் உள்ள, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வைர கிரீடங்கள் மற்றும் தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதனை சாமிக்கு அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த காணிக்கை அனைத்தும் கோடிக்கணக்கில் வரும் என கூறப்படுகிறது.

Advertisment

இளையராஜாவுக்கு மூகாம்பிகை கோயில் இஷ்ட தெய்வம் என சொல்லப்படுகிறது. இதனால் வழிபாடு சென்ற போது, மூகாம்பிகை அம்மனால் தன் வாழ்வில் பல அதிசயங்கள் நடந்ததாக அவர் நினைவுகூர்ந்ததாக கூறப்படுகிறது. இளையராஜா சென்ற போது அவருக்கு கோவில் நிர்வாக சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இவருடன் அவரது மகன் கார்த்திக் ராஜா, மற்றும் பேரன் யத்தீஸ்வரும் சென்றிருந்தனர். இவர்களுடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இக்கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இதற்கு முன்பு பலமுறை இளையராஜா இங்கு சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.