காப்புரிமை விவகாரம்; இளையராஜா மனு தள்ளுபடி

235

சோனி மியூசிக் நிறுவனம், 2022ஆம் ஆண்டு இளையராஜா மியூசிக் நிறுவனத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில் சோனி மியூசிக் நிறுவனத்திற்குச் சொந்தமான 536 ஆல்பங்களில், 228 ஆல்பங்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாகவும், இதன் மூலம் சோனியின் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. 

மேலும் 2021ஆம் ஆண்டு எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்திடமிருந்து பதிப்புரிமை உரிமையைப் பெற்ற சில பாடல்கள், யூட்யூபில் பதிவேற்றப்பட்டு, இளையராஜா மியூசிக் நிறுவனத்தால் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படுவதை சோனி மியூசிக் நிறுவனம் கண்டறிந்ததாக குறிப்பிட்டிருந்தது. இதனால்    
ஒலிப்பதிவுகளில் சோனி நிறுவனத்தின் பதிப்புரிமையை இளையராஜா மியூசிக் நிறுவனம் மீறியதாகக் கூறி ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து இளையராஜா தரப்பில் சோனி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சோனி நிறுவனத்துக்கு எதிராக தாம் தாக்கல் செய்த காப்புரிமை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, ஒரே தன்மை கொண்ட வழக்குகள் இரு நீதிமன்றங்களில் நடப்பது முரண்பாடான தீர்ப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறி  சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பீ.ஆர்.கவாய் தலைமையில் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் இருக்கும் கோரிக்கையை இளையராஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் நீதிபதிகள் முன் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் அவரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Ilaiyaraaja sony Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe