
இசையில் இந்தியாவை தாண்டி உலகமெங்கும் தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்தவர் இளையராஜா. அவரது பெயருக்கு ஏற்றாற் போல் இன்றும் அந்த இளமை துள்ளல் குறையாது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு கடந்த மார்ச் மாதம் லண்டனில், தான் எழுதி முடித்த முதல் சிம்பொனியானியை அரங்கேற்றினார். இதன் மூலம் இலண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார். அவர் திரைத்துறைக்கு வந்து 50ஆண்டுகள் ஆகிறது.
இளையராஜா இதுவரை 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். 1,500க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். சினிமாவைத் தாண்டி இப்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜா இன்று 82வது பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ஸ்டூடியோவில் கேக் வெட்டி கொண்டாடினார். அவரைக் காண தொலை தூரத்தில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர். மேலும் இளையராஜவை சந்தித்து வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்து சென்றனர்.
ரசிகர்களின் வாழ்த்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை வாழ்த்திய ரசிக பெருமக்களுக்கு நன்றி. நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கும் நன்றி. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக உங்கள் சிரமங்களை எல்லாம் பார்க்காது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறீர்கள். இவர்கள் அல்லாது தூர தேசத்தில் இருந்து எனக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இவர்களை பார்க்கும் போது வாயெல்லாம் அடைச்சு போகுது. வார்தையே வரமாட்டிங்குது. என்னை பார்ப்பது சாதாரணமான விஷயம். ஆனால் அதற்காக தூங்காமல் இருந்து வருகிறார்கள். இதில் ஒரு வாரம் தூங்காமல் இருப்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது கடவுள் நம் மேல் எவ்வளவு கருணை வைத்துள்ளார் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு எப்படி வாழ்த்து சொல்வது என தெரியவில்லை” என்றுள்ளார்.
முன்னதாக இளையராஜாவின் 50ஆண்டு கால திரைபயணத்தை முன்னிட்டு அரசு சார்பில் விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. அது அவரது பிறந்தநாளான இன்று நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆனால் அது தற்போது தள்ளி போயுள்ளது.