Skip to main content

"பாலு, சீக்கிரமாக எழுந்து வா..!" - இளையராஜா உருக்கம்!

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
dg

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்தது. 

 

இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இந்நிலையில் இசைஞானி இளையராஜா எஸ்.பி.பிக்காக உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போது அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா!" என உருக்கமாக பேசியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜா வழக்கில் நீதிபதி விலகல்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ilaiyaraaja song copywright issue case

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

“என் அம்மாவின் அன்பு மாதிரி...” - இளையராஜா இசை குறித்து வெற்றிமாறன்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
vetrimaaran speech in ilaiyaraaja biopic event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எனக்கு ராஜா சார் இசையை எப்போது கேட்டாலும் ஒன்னுதான் தோணும். அது எங்க அம்மாவுடைய அன்பு மாதிரி. நிலையானது. எப்போதுமே மாறாது. வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அவரின் இசை ஏற்படுத்துகிற உணர்வு எப்போதுமே அப்படியே தான் இருந்துருக்கு. அவருடன் வேலை பார்ப்பது ரொம்ப இலகுவாக இருக்கும். சமமாக நம்மை நடத்துவார்.

அவர் முதல் படம் பண்ணும்போது எனக்கு ஒரு வயசு. ஆனால் என்னோடு அவர் பேசும்போது, படம் பார்த்துவிட்டு பரிந்துரை சொல்லலாமா எனக் கேட்டார். அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் கேட்டார். அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு இயக்குநரை அவர் வைத்து வேலை பார்ப்பார். அவர் இசையமைப்பதை பார்த்தால், இசையமைப்பது ரொம்ப ஈஸி என தோணும். சிரமமே இல்லாமல் வேலை பார்ப்பார். என்னுடைய பார்வையில் அவர் ஒரு மியூசிஷியன் என்பதை விட மெஜிசியன் தான். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது நம் நாட்டினுடைய பெரிய ஆவணம்.

அவர் இப்போது வேலை பார்த்து வருகிற வாழ்க்கை, இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் இருக்கும் 40 வருட வாழ்க்கை, இவ்வளவு காலங்களையும் ஒரு நாட்டினுடைய வரலாற்று பதிவாக அவருடைய இசையில் நாம் சேர்க்க வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையில் அவருடைய இசை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை படமாக உருவாகும் போது தமிழ் இசை கேட்டு வளர்ந்தவர்கள் அத்தனை பேருடைய படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் நான் பங்காற்ற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அருணுக்கு இப்படம் ஒரு கிஃப்ட். தனுஷிற்கு மற்றுமொரு சவால். எந்த சவாலை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக தனுஷ் தாண்டி வருவார். இந்த படத்தில் ராஜா சாருடைய இசையை கேட்க ஆர்வமாக இருக்கேன்” என்றார்.