
இசைத்துறையில் சிறந்து விளங்கி தனது 82வது வயதிலும் ஓயாது இசையமைத்து வருகிறார் இளையராஜா. இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் மூவரும் இசையமைப்பாளராக உருவெடுத்தனர். இதில் யுவன் ஷங்கர் ராஜா தொடர்ந்து ஆக்டிவாக இசையமைத்து வருகிறார். கார்த்திக் ராஜா அவ்வப்போது இசையமைத்து வருகிறார். பவதாரிணி சில படங்களுக்கு இசையமைத்தார். இவர் கடந்த ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீஸ்வர் தற்போது இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார். சினிமாவில் அல்லாது ஒரு பக்தி பாடலை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையாரைப் போற்றும் விதமாக ‘நமசிவாயா’ என்ற பாடலை எழுதி இசையமைத்து, அப்பாடலை திருவண்ணாமலை கோயிலில் எளிமையான முறையில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி தொடர்பாக பேசிய யத்தீஸ்வர், “முதல் பாடல் பக்தி பாடலாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தொடர்ந்து சினிமாவில் பணியாற்ற ஆசைப்படுகிறேன். வெஸ்டர்ன் ஸ்டைல் இசையில்தான் இப்போதைக்கு அதிக கவனம் செலுத்துகிறேன்” என்றார்.