
இசையில் இந்தியாவை தாண்டி உலகமெங்கும் தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்தவர் இளையராஜா. அவரது பெயருக்கு ஏற்றாற் போல் இன்றும் அந்த இளமை துள்ளல் குறையாது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு கடந்த மார்ச் மாதம் லண்டனில், தான் எழுதி முடித்த முதல் சிம்பொனியானியை அரங்கேற்றினார். இதன் மூலம் இலண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார். அவர் திரைத்துறைக்கு வந்து 50ஆண்டுகள் ஆகிறது.
இளையராஜா இதுவரை 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். 1,500க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். சினிமாவைத் தாண்டி இப்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜா இன்று 82வது பிறந்தநாள் காண்கிறார். இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அவர், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்பொனி நிகழ்ச்சியை அதே ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் அரங்கேற்றவுள்ளதாக தெரிவித்தார்.
பின்பு சிம்பொனி நிகழ்ச்சிக்கு ரசிகர்களைப் போல் நானும் காத்திருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்தியதை வாசித்து காண்பித்தார். அப்போது அவரிடம் தமிழக அரசின் இந்த முயற்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். உடனே கோபப்பட்ட இளையராஜா, “கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. நான் அறிவிக்க வேண்டியதை அறிவிச்சாச்சு. அதோட முடிச்சுக்கங்க. நீங்க கேட்ட கேள்விக்கு, நான் எப்படி பார்க்கனும்னு பதில் சொல்லியிருப்பேன். அப்படி சொன்னா... இவர் இப்படித்தான்யா பேசுவாருன்னு சொல்வீங்க. அதெல்லாம் எதுக்கு. நல்ல செய்தியை சொல்லிருக்கேன். சந்தோஷமா போங்க” என்றார்.