Skip to main content

“மன்னர்கள் செய்த வேலையை நம் பிரதமர் செய்திருக்கிறார்” - இளையராஜா புகழாரம்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
ilaiyaraaja about pm modi regards ramar temple opening

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் இன்று மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவியுள்ளார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டுப் பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதே வேளையில் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் நாரத கான சபாவில், சென்னையில் அயோத்தியா என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ரவி, இசையமைப்பாளர் மற்றும் எம்.பி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

அப்போது இளையராஜா பேசுகையில், “இன்றைய நாள் சரித்திரத்தில் மிகவும் முதல் முறையாக நடக்கின்ற நாள். சரித்திரம் என்று சொல்லும் போது, தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும், வரலாற்றிலே முதல் முறையாக ஒரே ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அது இன்றைய நாள் தான். அது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழாக இருக்கும். இந்த காரியத்தை முடித்த பிரதமர் மோடிக்கு சேர்த்து தரும். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் முடியும். யாராலும் பண்ண முடியாது. இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். அவர்கள் என்ன செய்தார்கள். எது சரித்திரத்திலே நிற்கிறது. இவையெல்லாம் கணக்கு போட்டு பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... சொல்லும் போது கண்ணீல் நீர் வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மன நிறைவை தருகிறது. அதே சமயம் அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இங்கே இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும் உங்கள் முன் இருக்கிறது கொஞ்சம் ஆறுதலை தருகிறது. 

இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு மன்னன் கட்டியது. ஆனால் இந்தியாவிற்கே முழுமையாக ஒரு கோவில் எழுந்திருக்கிறது என்றால், அது இந்த கோவில் தான். பாண்டிய மன்னர்கள் மீனாட்சி கோவில் கட்டினார்கள். பாண்டிய பரம்பரைகள் எல்லாம் மீனாட்சி கோவிலை வணங்கி வந்தது. அதே போல் சோழ தேசத்தில் ராஜ ராஜ சோழன், பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார். உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது. ஆனால், உலகத்திலே ஸ்ரீ ராமருக்காக, அவர் பிறந்த இடத்திலேயே கோவில் கட்டியது அதிசயம். அதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை நம் பிரதமர் செய்திருக்கிறார்” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.