ilaiyaraaja about his next concert

இசைத்துறையில் தனது இசையின் மூலம் எண்ணற்ற மனங்களை வென்ற இளையராஜா இன்றளவும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். கடந்த வருடம் கும்பகோணத்தில் இசைக் கச்சேரியை நடத்திய இளையராஜா, அதில் கலந்து கொண்டு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அப்போது தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் அவரின் இசை பயணம் தொடரும் என குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

அந்த வகையில் அடுத்ததாக திருநெல்வேலியில் நேற்று ஜனவரி 17ஆம் தேதி இசைக் கச்சேரியை நடத்தினார். ரெட்டியார்பட்டி பகுதியில் நடந்த இந்த இசைக் கச்சேரியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்துப்பாதிப்பு ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இந்த இசைக் கச்சேரி நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சி குறித்து தற்போது இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் அவரவர்களின் ஊர்களின் பெயர்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.