லண்டனில் வெற்றிகரமாக சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி முடித்த இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அவரது 50 ஆண்டு திரைப்பயண நிகழ்வும் கொண்டாட திட்டமிடப்பட்டது. மேலும் இந்த விழா அவர் கொண்டாடி வரும் பிறந்தநாள் தினமான ஜூன் 2ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் பின்பு சில காரணங்களால் அது தள்ளிப் போனது. இப்போது வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றன. இதில் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா குறித்து செய்தியாளர்களிடம் இளையராஜா பேசுகையில், “தமிழக அரசு ஒரு கலைஞனுக்கு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல் முறை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம் இருக்குறதோ அதே அளவு எனக்கும் இருக்கிறது. விழாவில் மக்கள் கலந்து கொள்வதற்கு அந்த ஸ்டேடியம் போதாது. ஏனென்றால் மக்கள் அவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்கள்” என்றார்.
Follow Us