தமிழில் ரஜினி நடித்த காலா மற்றும் அஜித் நடித்த வலிமை ஆகிய படங்களில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. இவரது நெருங்கிய உறவினர் ஆசிப் குரேஷி என்பவர் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் சிக்கன் பிஸ்னஸ் நடத்தி வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பார்க்கிங் பிரச்சனையால் ஆசிப் குரேஷி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து ஆசிப் குரேஷியின் ஒரு மனைவி கூறுகையில், “நேற்று ஒரு 10 மணியளவில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபர் எங்கள் வீட்டின் முன் அவரது ஸ்கூட்டரை நிறுத்தினார். அவரை அங்கு பார்ங்கிங் செய்ய வேண்டாம் என என் கணவர் கேட்டுக் கொண்டார். உடனே அந்த நபர் கடுமையான வார்த்தைகளால் என் கணவரை திட்டி திருப்பி வருவதாக மிரட்டிவிட்டு சென்றார். பின்பு சில நிமிடங்களிலே அவரது சகோதரருடன் வந்த அவர், என் கணவரை கூர்மையான ஆயுதத்தால் குத்தினார். இருவரும் என் கணவரை கடுமையாக தாக்கினர். உடனே நான் என் மைத்துனரை அழைத்தேன். ஆனால் அவர் வருவதற்குள் என் கணவர் இறந்துவிட்டார்” என்றார்.
இதையடுத்து நடிகை ஹுமா குரேஷியின் தந்தையும் இறந்துபோனவரின் மாமாவுமான சலீம் குரேஷி, “இரண்டு பேர் வீட்டின் முன் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தினார்கள். ஆசிப் அவர்களை அதை ஓரமாக நிறுத்தவும் வீட்டின் என்ட்ரன்ஸை மறைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இது வாய்த் தகராறாக மாறி, பின்பு தாக்குதல் அளவுக்கு சென்றது. அவர்கள் இருவரும் சேர்ந்து என் மருமகனைக் கொன்றுவிட்டனர்” என்றார். இந்த சம்பவம் குறித்து ஹூமா குரேஷி இன்னும் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே சம்பவம் தொடர்பாக கொலை செய்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் கௌதம் மற்றும் உஜ்வால். இதில் கௌதம் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் உஜ்வால் அப்பகுதியில் நடக்கும் மதக் கூட்டங்களில் டோலக் இசைக்கருவி வாசிப்பவராக இருந்து வருகிறார் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரும் தாய் இல்லாமல் தந்தை வளர்ப்பில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் ஆசிஃபை அவர்கள் தாக்கும் சீசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. பார்க்கிங் பிரச்சனையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.