இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், வேறு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மார்ச் 5-ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகுமென கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. இவ்வறிவிப்பு படத்தை திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த செல்வராகவன் ரசிகர்களை உற்சாகமாடையச் செய்தது. மேலும், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாகப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியும் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் வெளியீட்டில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம், தங்களிடம் 1.24 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளதாக ரேடியன்ஸ் வீடியோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இது குறித்து ரேடியன்ஸ் வீடியோ நிறுவனம் அளித்த புகார் மனுவில், 'எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம், 2.42 கோடி ரூபாய் கடன் கேட்டது. படத்தை வெளியிடுவதற்கு முன்பு 1.75 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தியது. மீதத் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிடவுள்ளார்கள். இதனால் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நெஞ்சம் மறப்பதில்லை பட வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.