Advertisment

பாலியல் புகார்; இயக்குநரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

hema committee report ranjith anticipatory bail denied

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்குத் தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை ஸ்ரீலேகா மித்ரா இயக்குநர் ரஞ்சித் மீதும் நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் குற்றம் சாட்டினார். நடிகை மினுமுனீர் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித், சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் குற்றத்தை மறுத்தனர். இதில் ரஞ்சித், சித்திக் தங்கள் வகிக்கும் திரைத்துறை தொடர்பான பதவிலிருந்தும் விலகியிருந்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நடிகர்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு கலைக்கப்பட்டது. மேலும் அந்த சங்கத்தின் தலைவர் மோகன்லால் உள்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் பதவி விலகினர். இதனிடையே நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் நடிகைகளின் வாக்கு மூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் ரஞ்சித் முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பிணை பெறக்கூடியது என்பதால் முன் ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

Kerala mollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe