அருள்நிதி நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் 'டிமான்ட்டி காலனி'. எம்.கே தமிழரசு தயாரித்திருந்த இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ரமேஷ் திலக், சனத், அபிஷேக் ஜோசப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படத்திற்கு கேபா ஜெரேமியா என்பவர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் அருள்நிதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி அஜய் ஞானமுத்து தயாரிக்கிறார். வெங்கி வேணுகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார். வெங்கி வேணுகோபால், அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜய் ஞானமுத்து 'டிமான்ட்டி காலனி 2' படம் குறித்து கூறுகையில், "தெளிவான உத்வேகத்துடன் டிமான்ட்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது இனி அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டிருக்கும். ஜூலை 2022-க்குள் 'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்" எனத்தெரிவித்துள்ளார்