Skip to main content

"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

hfdhdh

 

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அந்தாலஜி படமாக உருவான 'சில்லுக்கருப்பட்டி' படத்தில் வயதான தம்பதியினருக்கு இடையே மலரும் காதலை மையப்படுத்திய 'டர்டில்ஸ்' என்ற கதையின் நாயகனாக நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் இன்று காலை மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், 'சில்லுக்கருப்பட்டி' பட இயக்குனர் ஹலிதா ஷமீம் இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"ஸ்ரீராம் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிக வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். அவரது பால்கனியிலிருந்து எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்துள்ளார். அவரது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தார். தயாரிப்பில் இருக்கும் சில பெரிய படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னுடன் பகிர்ந்தார்.

 

ஸ்ரீராம் சார், உங்கள் ஆர்வமும், வசீகரமும் என்றும் எங்கள் மனதில் இருக்கும். உயிர்ப்புடன் இருந்த மனிதர் நீங்கள். இப்போது இல்லை என்பதை நம்பமுடியவில்லை. நீங்கள் அவ்வளவு அன்போடு 'என் டைரக்டர் மேம்' என்று என்னை அழைத்தது, உங்கள் காலை நேர ஓவியங்களை, நீங்கள் நடித்து வந்த பெரிய படங்களின் புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்தது என எதுவும் மறக்காது. " 'சில்லுக் கருப்பட்டி' வெளியாகி ஒரு வருடம் ஆனதைக் கொண்டாட நம் குழுவை இரவு விருந்துக்கு அழைத்ததற்கு நன்றி. நான் அதற்கான செலவைப் பகிர்ந்துகொள்கிறேன்" என்று சொன்னபோது, இது என் விருந்து, அடுத்தமுறை நீங்கள் கொடுங்கள் என்று சொன்னீர்கள்.

 

ஆனால், அடுத்த முறை என்பது கிடையாது என்பதை உணரும்போது நொறுங்கிப் போகிறேன். வாழ்க்கை மிகவும் குரூரமானது. என் அன்பும், மரியாதையும் சார். நீங்கள் எங்கிருந்தாலும், கண்டிப்பாக அங்கிருந்து, உங்கள் இணையற்ற உற்சாகத்துடன் எங்களைப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் வாழ்க்கையை நேசித்தவர். நான் என்றுமே உங்களை மனதில் வைத்திருப்பேன். நீங்கள் வாழ்க்கையை எப்படி நேசித்தீர்களோ அப்படி நேசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வேன். ‘டர்டல்ஸ்’ கதையில் நீங்கள் சொன்ன வசனம், 'என்னால் இன்னும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்பது. படப்பிடிப்பில் நீங்கள் இந்த வசனத்தைப் பேசியது என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான் மகள் - சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்த்தார்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

ar rahman daugter khatija rahman become a music director

 

சில்லுக் கருப்பட்டி, பூவரசம் பீப்பீ, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார். இப்போது 'மின்மினி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை 'ஆங்கர் பே ஸ்டுடியோஸ்' தயாரிக்க எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை 7 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.  

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார். அவர் திறமையான மனிதர் என்றும் சிறப்பான இசை வந்துகொண்டிருப்பதாகவும் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். கதீஜா ரஹ்மான், 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார்.

 

 

Next Story

"நான் பார்த்து பார்த்து சேர்த்தது திருடப்பட்டுள்ளது" - மம்மூட்டி படம் மீது ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Stealing all the aesthetics from a film isn't acceptable said halitha shameem about Nanpakal Nerathu Mayakkam

 

மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியான படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தமிழ்நாட்டில் சில காரணங்களால் ஜனவரி 26ஆம் தேதி வெளியானது.

 

இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் மற்றும் ஒளிப்பதிவாளராக மம்மூட்டியின் 'பேரன்பு' படத்தில் பணியாற்றிய தேனி ஈஸ்வர் உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.    

 

இந்த நிலையில் இப்படம் குறித்து 'சில்லுக்கருப்பட்டி', 'ஏலே' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், காட்சிகள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, "ஒரு படத்தின் அனைத்து அழகியலையும் திருடுவது ஏற்கத்தக்கது அல்ல. ஏலே படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன்முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். 

 

அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்தப் படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயர்ச்சியைத் தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்காரர். செம்புலி இங்கே செவலை. அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலேவில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார். 

 

படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள், இவையாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்கப்பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதைப் பதிவிடுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.