தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சந்திரசேகர் - தமிழ்ச்செல்வி தம்பதியரான கவின் (எ) செல்வகணேஷ். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற அவர், தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது, அங்கு வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்பவர், கவினை நான் தான் கொலை செய்தேன் என பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவர் கொடுத்த வாக்கு மூலத்தில், கவினும் சுர்ஜித்தின் அக்காவும் பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இது சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. அதனால் கவினை வெட்டி படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் இப்போது நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் மணிமுத்தாறு ஆயுதப்படையின் தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியனில் எஸ்.ஐ.யாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கும் தனது மகள் கவினிடம் பழகி வந்தது பிடிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில் அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் சுர்ஜித் கொலை செய்ததாக கவினின் உறவினர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் அவரது கிருஷ்ணவேணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆணவக் கொலை சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திரைப் பிரபலங்களும் கண்டனங்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், சாதிக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில்,
“தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்” எனக் குறிப்பிட்டு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.