துரோகி படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சூரரைப் போற்று' படம் 68வது தேசிய விருது விழாவில் 5 தேசிய விருதுகளை வாங்கியது. இப்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.
மேலும் மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாமல் கே.ஜி.எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை கைவசம் வைத்துள்ளார்.
சுதா கொங்காரா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், "பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் சுதா கொங்கரா. சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் நீங்கள் செய்த மாயாஜாலத்தை உலகம் காணக் காத்திருக்கிறது, இப்படம் பாலிவுட்டை அதிர வைக்கப் போகிறது. மேலும் அதை முடித்துவிட்டு தமிழில் அடுத்ததாக நீங்கள் பண்ணவுள்ள படம்" தெறிக்கப் போகுது என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ஃபயர் எமோஜியை பறக்கவிட்டுள்ளார்.
இதனால் சூர்யா, சுதா கொங்காரா, ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.