இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதனை எதிர்த்துப் பழங்குடியினப் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல்ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொலை, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாகத்தேடி வருகின்றனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத்தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்;நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும் எனஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
இந்த மணிப்பூர் சம்பவத்திற்கு திரைப் பிரபலங்கள் வைரமுத்து, அக்ஷய் குமார் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம்; மன்னிக்க முடியாத பெருங்குற்றம். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே...”எனத்தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைத்தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்….
கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…
— G.V.Prakash Kumar (@gvprakash) July 20, 2023