தமிழில் முன்னணிஇசைப்பாளரான ஜி.வி பிரகாஷும் பிரபல பாடகி சைந்தவியும் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் இனைந்து பல்வேறு பாடல்கள் பாடியுள்ளனர். அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் கருத்து வேற்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வந்தது. பின்பு இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்பு இருவரும் வெளியிட்ட செய்தி குறிப்பில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிய முடிவு செய்துள்ளோம். அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காதல் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும்ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பலரும் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதுஏற்புடையதல்ல என்றுதெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது ‘யாரோ ஒரு தனிநபரின்’ வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம் எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.