ADVERTISEMENT
கரோனாவால் திரைப்பட ஷூட்டிங் மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிப் பணியாளர்களும், கலைஞர்களும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் டி.வி. தொகுப்பாளர் மஞ்சித் க்ரோவல் என்பவர் கடன் தொல்லை காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆஷிஷ் ராய் என்பவர் தனது சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார். பிரபல நடிகை க்ரீத்தி சனோனும் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை, தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவ தாருங்கள் என்றார். இதனால் இந்தியத் தயாரிப்பாளர் சங்கம், தனது உறுப்பினர்களுக்கு சம்பள பாக்கியைத் திருப்பி கொடுக்கும்படி அறிக்கை அனுப்பியுள்ளது.
ADVERTISEMENT
அதில், “அரசாங்கத்தால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், நமது உறுப்பினர்களுக்காகப் பணியாற்றி இன்னும் சம்பளம் பெறாத பணியாளர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் நிலை மிக மோசமாக மாறியுள்ளது, அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிந்திருக்கும்.
நமது உறுப்பினர்களுக்கும் பணத்தட்டுப்பாடு உள்ளது, பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில், நமது உறுப்பினர்கள், அவர்களின் தயாரிப்புகளுக்காக யாரிடமாவது வேலையைப் பெற்றிருந்தால் அதற்கான சம்பள பாக்கி எவ்வளவு முடியுமோ அதைத் தந்துமுடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இது போன்ற கடினமான சூழலில் அந்தப் பணியாளர்கள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் தினசரி அத்தியாவசியத் தேவைக்கு ஏதுவான பணம் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தக் கடினமான சூழலில், பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர் கண்ணியத்துடன் பிழைக்கத் தேவையான விஷயங்களை நம் உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT