Advertisment

"ஏ.ஆர்.ரஹ்மான் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் இல்லை" - ஜி.எஸ்.டி ஆணையர்

  GST Commissioner reply petition to ar rahman legal appeal

Advertisment

கடந்த 2019ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி ஆணையர், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, ரூ 6.79 கோடி சேவை வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், ரூ 6.79 கோடி வரி செலுத்தவில்லை என கூறி ரூ 6.79 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை. மேலும் ஜி.எஸ்.டி துறையிலே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரபட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையர் பதில் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

ar rahman GST
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe