Skip to main content

"நான் சிரிக்க அவர்தான் காரணம்..." - கெளதம் மேனன் நெகிழ்ச்சி

Published on 25/11/2019 | Edited on 26/11/2019

தமிழ் திரைப்பட உலகில் சமீபமாக கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் பல ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை தயாரித்து வந்தாலும் சமீபமாக 'வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் தயாரித்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படங்கள் 'எல்.கே.ஜி' மற்றும் 'கோமாளி'. இந்த இரண்டு படங்கள் மற்றும் அவர்களது இன்னொரு தயாரிப்பான 'பப்பி' ஆகிய மூன்று படங்களின் வெற்றி விழா சென்னையில் 24.11.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

 

gowtham menon with vels isari ganesh

 

jada AD



இந்த விழாவில் இயக்குனர் கெளதம் மேனன் பங்கேற்றார். கெளதம் மேனன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் 'ஜோஷ்வா... இமை போல் காக்க' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஐசரி கணேஷின் உறவினரான வருண், நாயகனாக நடித்து வருகிறார். கெளதம் மேனன் இயக்கி, சில வருடங்களாக வெளிவராமல் பல பிரச்சனைகளை சந்தித்து நின்ற 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை சமீபத்தில் தன் கையில் எடுத்து பிரச்சனைகளை தீர்த்து நவம்பர் 29 அன்று படம் வெளியாகுமென்று அறிவித்துள்ளார்.


வேல்ஸ் வெற்றி விழாவில் கலந்துகொண்ட கெளதம் மேனன், ஐசரி கணேஷின் இந்த உதவியை குறிப்பிட்டு நெகிழ்ச்சியாகப் பேசினார். "நான் பொதுவா, என் வேலையில் இருக்கும் கஷ்டங்கள், துக்கங்கள், அழுத்தம் எதையும் வீட்டுக்குக் கொண்டு செல்ல மாட்டேன். வீட்டுக்குப் போயிட்டா என் குடும்பத்தினருக்கான ஆளா மாறிடுவேன். ஏன்னா, என் வீட்டில் உள்ளவங்க அப்படி. ஆனா, வீட்டை விட்டு வெளிய வந்து செய்யும் வேலையில், நான் ரசிச்சு, சிரிச்சு வேலை பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு. அதான் உண்மை. ஆனால், சமீப காலமா இந்த ரெண்டு மாசமா, நான் சிரிச்சு ரசிச்சு வேலை செய்வதற்குக் காரணமாக இருக்கும் ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மட்டுமல்ல, என் டீமும் சிரிக்கக் காரணமானவர் அவர். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகுது. ஐசரி கணேஷ் சார் இல்லைன்னா இது நடந்திருக்காது. அவர் முயற்சியில்தான் இது நடக்கிறது" என்று கூறினார்.                              

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார்.