ADVERTISEMENT

கவுண்டமணி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

07:17 PM Mar 15, 2024 | kavidhasan@nak…

கடந்த 1996 ஆம் ஆண்டு, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை கவுண்டமணி வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதையடுத்து கட்டுமான பணிகள் 2003 ஆம் ஆண்டு வரை தொடங்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வழக்கறிஞர் ஆணையர், சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே கவுண்டமணியிடம் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், கவுண்டமணியிடமிருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு தனியார் கட்டுமான நிறுவனமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் வணிக வளாகம் கட்டுவதற்காக, கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT