ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணியில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

Advertisment

இந்த படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இளையராஜா தரப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாடல்களை பயன்படுத்தியதற்காக ராயல்டி தொகையை தர வேண்டும் என்றும் அல்லது பாடல்களை நீக்க வேண்டும் என்றும்  7 நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டது.

இளையராஜா நோட்டிஸிற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதில் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என தெரிவித்து இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவின் மூன்று பாடல்களையும் படத்தில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. வரும் 22ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. 

இதனிடையே இளையராஜா தரப்பில் நீதிமன்ற இடைக்கால உத்தரவை மீறி படத்தில் பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் அப்பாடல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்படி மன்னிப்பு கேட்கா விட்டால் நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு புதிய நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘குட் பேட் அக்லி’ படம் ஸ்ட்ரீமாகி வரும் நிலையில் அப்படம் நீக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் மனு தாரர் தரப்பில், படத்தை ஓடிடி-யில் இருந்து நீக்கியுள்ளதால் எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட பின் பாடல்களை பயன்படுத்த எப்படி தடை விதிக்க முடியும்? என்று வாதிடப்பட்டது. இதையடுத்து இளையராஜா மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.