Skip to main content

“300 கோடி ரூபாய் மோசடி உண்மையில்லை”- ஞானவேல்ராஜா அறிக்கை! 

Published on 24/07/2020 | Edited on 24/07/2020
gnanavelraja

 

 

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி வழக்கில் இராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும். அப்படி தவறினால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

 

இதனைதொடர்ந்து ஞானவேல்ராஜா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “கரோனா வைரஸ்‌ தாக்கத்தால்‌ பொதுமக்களும்‌, திரைத்துறையினரும்‌ மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்‌ இன்றைய நிலையில் சில தொலைக்காட்சி சேனல்கள்‌, பத்திரிகைகள்‌, மற்றும்‌ சமூக வலைதளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தச் செய்திகளில்‌ எள்‌ முனையளவும்‌ உண்மையில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்‌.

 

தமிழ்த்‌ திரையுலகிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளையும்‌, பல திறமையான நடிகர்களையும்‌, படைப்பாளிகளையும்‌, தொழில்நுட்பக்‌ கலைஞர்களையும்‌ தந்துள்ள எனது 'ஸ்டுடியோ கிரீன்‌' நிறுவனம்‌ மூலம்‌ தயாரிக்கப்பட்ட 'மகாமுனி' திரைப்படம்‌ 2019ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 6ஆம்‌ தேதி ரிலீஸ்‌ ஆனது.

 

நீதிமணி என்பவர்‌ 2019-மே மாதம்‌ என்னை அணுகி 'மகாமுனி' திரைப்படத்தின்‌ தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும்‌ என்று கோரினார்‌. அவ்வகையில்‌ 2019ஆம் ஆண்டு மே 27ஆம்‌ தேதி ரூ.6,25,00,000 (ஆறு கோடியே இருபத்தைந்து லட்சம்‌ ரூபாய்) தொகைக்கு நீதிமணியின்‌ 'Tarun Pictures' நிறுவனத்திற்கு 'மகாமுனி' திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம்‌ போடப்பட்டது.

 

நீதிமணி‌ பகுதி தொகையாக ரூ.2,30,00,000 (இரண்டு கோடியே முப்பது லட்சம்)‌ மட்டுமே செலுத்தினார்‌. மீதமுள்ள ரூ.3,95,00,000 (மூன்று கோடியே தொன்னூற்று ஐந்து லட்சம்‌) தொகையை பிறகு தருவதாகக் கூறினார். இன்றுவரை தராமல்‌ என்னை ஏமாற்றிவிட்டார்‌. மீதமுள்ள தொகையைத் தரவேண்டி நீதிமணி மீது சினிமா துறையின் சட்ட திட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில்‌ நீதிமணியும்‌ அவரின்‌ கூட்டாளிகளும்‌ ரூ.3,00,00,000 (மூன்று கோடி) மோசடி செய்துவிட்டதாக துளசி மணிகண்டன்‌ என்பவர்‌ ஒரு புகார்‌ அளித்துள்ளார்‌. என்‌ மீதோ, ஸ்டுடியோ கிரீன்‌ நிறுவனம்‌ மீதோ எவ்வித புகாரும்‌ அளிக்கப்படவில்லை. ஒரு பொருளை வர்த்தகம்‌ செய்யும்‌போது அதை வாங்கும்‌ நபர்‌ என்ன செய்கிறார்‌, அவரின்‌ பின்னணி என்ன என்பதை நாம்‌ ஆராய்ச்சி செய்வதில்லை. சட்டப்படியான வியாபாரத்தை மட்டுமே பேசமுடியும்‌. அவ்வகையில்‌ 'மகாமுனி' திரைப்படத்தை சட்டப்படியாக முறையாக விற்பனை செய்ததை தவிர எனக்கும் நீதிமணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

 

நீதிமணி‌ மீது துளசி மணிகண்டன்‌ அளித்துள்ள புகாரில்‌ எவ்வித முகாந்திரமும்‌ இல்லாமல்‌ என்னையும்‌, ஸ்டுடியோ கிரீன்‌ நிறுவனத்தையும்‌ இணைத்து என்‌ புகைப்படத்தையும்‌ பயன்படுத்தி நான்‌ நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி '300 கோடி ரூபாய்‌ மோசடி' என உண்மைக்கு புறம்பான, மிகவும் தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

 

என்னிடம்‌ எவ்வித விளக்கமும்‌ கேட்காமல், தன்னிச்சையாகவும்‌, தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும்‌ வகையிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த‌ செய்திகளைப்‌ பார்த்து நானும்‌, என்‌ குடும்பத்தினரும்‌ மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளோம்.

 

இதுபோன்ற செய்திகள் திரைத்துறையில் நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயருக்கு ஊறு விளைப்பதோடு எமது எதிர்கால வியாபாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. எனவே, இதுபோன்ற செய்திகளை என் அனுமதி பெறாமலும், உண்மைக்கு புறம்பாகவும் யாரும் வெளியிட வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

மேலும், இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் அந்த செய்தியை வெளியிடுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்வதோடு மான நஷ்ட ஈடு வழக்கும் தொடரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் வழக்கு

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
sivakarthikeyan gnanavel raja case

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. இப்படத்தில் நடிக்க தனக்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தந்ததாகவும், மீதமுள்ள ரூ. 4 கோடியை பெற்றுத் தர வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சம்பளத்துக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா அதை வருமான வரித் துறையில் செலுத்தவில்லை. இதனால், டிடிஎஸ் தொகை ரூ. 91 லட்சத்தை வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரித்துறை வசூலித்தது. அதை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து, சிவகார்த்திகேயன் கட்டாயத்தின் பேரில் தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும் அதனால் தங்களுக்கு ரூ. 20 கோடி  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தனர். இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பு சிவகார்த்திகேயனுக்கும் எங்களுக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது. மேலும் டிடிஎஸ் தொகையும் வருமான வரித்துறையில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வந்தது. அப்போது, சிவகார்த்திகேயனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய ரூ.12.60 லட்சத்தை வட்டியுடன் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
 

Next Story

அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல் - சிக்கலில் ஞானவேல் ராஜா

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
director sr Prabhakaran shared shocking news about gnanavel raja regards paruthiveeran issue

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். அதில், “அமீரின் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது எனக் குறிப்பிட்டு சசிகுமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். பின்பு சமுத்திரகனியும் “வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்” எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். 

இதையடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக அமீர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் தற்போது உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, ஞானவேல் ராஜாவுக்கு நன்றி என குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , “அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த கடிதம். இதுவரை கடந்த 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி அண்ணன் அமீரின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை. ஆனால் அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல முன்னால் நிற்கிறது. 

அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட பெரும் படைப்பாளி என்று உலகறிய செய்திருக்கிறது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் இந்த மூன்று படைப்புகளுமே போதும். அண்ணன் அமீரை இன்னொரு பாரதிராஜா-வாக ஏற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து அவருக்கு அதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி. உண்மை என்று ஏதேதோ பேசினீர்களே. இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிக்கட்டா? ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி பெற்று பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே, அதை பற்றி பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா?

உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஒரே தீர்வு பேட்டியோ மன்னிப்பு கடிதமோ அல்ல, நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு, இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பணத்தை ஏமாற்றினீர்களோ அதன் இன்றைய மதிப்பு என்னவோ அதை அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து இந்த பிரச்சனையை நீங்கள் முடித்து கொள்வதுதான்” என குறிப்பிட்டுள்ளார்.