gnanavel raja

'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குநரான டீகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி காட்டேரி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

Advertisment

நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ”இயக்குநர் டீகேவிடம் இருந்து இரவு திடீரென மெசேஜ் வரும். என்னுடைய படத்தை ரிலீஸ் செய்தால்தான் உனக்கு நல்ல நேரமே வரும் என்றெல்லாம் என்னை எச்சரித்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு நல்ல நேரம் வந்த பிறகுதான் இந்தப் படம் வெளியாகிறது. காட்டேரி படம் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும். இது திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம். சமீபத்தில் வந்த சில பேய் படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஆனால், இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ரசிகர்களைக் கவர்ந்து, அவர்களுக்கு பிடிக்கக்கூடிய படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

Advertisment

படம் எடுத்து பல ஆண்டுகளான போதும் பொறுமையாக இருந்த நடிகர், நடிகைகளுக்கு நன்றி. அவர்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஸ்ரீலங்காவில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு க்ளைமேட் ரொம்பவும் சவாலாக இருந்தது. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு எல்லோருமே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நாங்கள் திட்டமிட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே படப்பிடிப்பை நிறைவுசெய்ய முடிந்தது என்றால் அது படக்குழுவினரின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமானது” எனத் தெரிவித்தார்.