தமிழ் சினிமாவின்வழக்கமான காதல் கதையிலிருந்து அதன் போக்கை மாற்றியதில் இயக்குநர் கெளதம் மேனனுக்கு முக்கிய பங்கு உண்டு. காதலின் ஆழத்தையும், இளைஞர்களின் அழகான வாழ்வியலையும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் சொல்லிருப்பார். நடிப்பதற்கு தமிழ் மட்டும் போதும் என்றிருந்த நிலையில், கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஆங்கிலமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தனது ஸ்டைலில்முத்திரை பதித்துள்ளார்.
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்தற்போது சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கிவருகிறார். இதனிடையே, நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் கெளதம் மேனன், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ருத்ர தாண்டவம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன், அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் 'அன்புச்செல்வன்' படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (03.11.2021) காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த போஸ்டரை ஷேர் செய்துவந்தனர்.
இந்நிலையில், 'அன்புச்செல்வன்' படம் உருவாவது குறித்து தனக்கே தெரியாது எனஇயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. நான் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி எனக்கே தெரியாது. இந்த இயக்குநரை யார் என்றும் தெரியாது. நான் இதுவரை அவரை சந்தித்தது கூட கிடையாது. இதில் பெரிய தயாரிப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற ஒரு செய்தியை எளிமையாக உருவாக்க முடியும் என்பது அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.