
ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மிஸ்டர்.எக்ஸ்’. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கி வருகிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் 2023ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கௌதம் ராம் கார்த்திக், “இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து உருவாக்கலாம். ஆனால் அதில் நடிப்பவர்களை பாதுகாப்பதில் சில்வா மாஸ்டர் மிகுந்த அக்கறை காட்டினார். அது மட்டுமல்ல ரொம்பவே வித்தியாசமான முறையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
குறிப்பாக க்ளைமாக்ஸில் நடக்கும் இறுதிச் சண்டைக் காட்சிக்காக ரைஸா, அனகா, அதுல்யா ரவி ஆகியோர் கடுமையாக ரிகர்சல் செய்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். மஞ்சு வாரியருடன் முதல் காட்சியில் நடிக்கும் போது அவரைப் பார்த்து பிரமித்துப் போய் அப்படியே நின்று விட்டேன். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்த கையோடு மீண்டும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் சரத்குமார் சாரும் நானும் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டோம். எப்போதுமே அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்ற நபராகவே தெரிவார். ஒர்க்குன்னு வரும் போது சிங்கம் மாதிரி அவரு. என்னை விட அவர் பயங்கர பிட்டாக இருக்கிறார். நான் இந்த திரையுலகில் நுழைந்ததிலிருந்து எனக்கு ரொம்பவே கிரஷ் ஆன ஒரு நடிகர் என்றால் அது ஆர்யா தான். இப்போது வரை ஸ்டைலிஷான, அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கக் கூடிய நடிகராக அவர் இருக்கிறார். அவருடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம்.
ஆனால் படப்பிடிப்பில் ஒரு பார்த்தபோது ஒரு ஹல்க் போல மிகப் பிரம்மாண்டமாக தோன்றினார். அந்த அளவிற்கு தனது உடலைக் கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் அங்கே வெள்ளம் வந்தபோது கூட ஆர்யா தங்கி இருந்த இடத்தில் இருந்து வெளியேறி அங்கிருந்தவர்களிடம் ஜிம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர் எனக்கு ஒரு ரோல் மாடல் தான். இயக்குநர் மனு ஆனந்த்தும் நானும் பல வருடங்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் இந்த கதாபாத்திரத்தில் என்னை அழைத்து நடிக்க வைத்துள்ளார். எனக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் அவர் சரியாகக் கணித்து வெளிக்கொண்டு வந்துள்ளார். நானும் அதைச் சரியாக செய்துள்ளேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.