கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் முதன் முறையாக கெளதமுடன் இணைந்து பணியாற்றினார். படத்தின் முழு ஆல்பமும் எவர்கிரீன் ஹிட்டானது.
படமும் இளைஞர்கள் கொண்டாடும் க்ளாஸிக் படங்களின் வரிசையில் இணைந்தது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பத்து ஆண்டுகளை, இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தில் வரும் கார்த்திக், ஜெஸ்ஸி, அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல் என அனைத்துமே ஈர்த்தது.
இதனிடையே, தற்போது நடைபெறும் ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கௌதம் மேனன் வீடியோ காலின் மூலம் த்ரிஷாவை வைத்துக் குறும்படம் ஒன்றை இயக்கியதாக செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து த்ரிஷா கார்த்திக்கிடம் பேசுவதுபோல டீஸர் வெளியாக, சிம்பு நடித்திருப்பதையும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பதையும் சீக்ரெட்டாக வைத்திருந்தார் கௌதம்.
இந்நிலையில் வி.டி.வி. ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்ப, நேற்று இரவு திடீரென இந்தக் குறும்படம் ரிலீஸானது. 12 நிமிடங்கள் உள்ள இந்தக் குறும்படம் முழுக்க ஒரு தொலைபேசி உரையாடலாக இருக்கிறது. மேலும், ரஹ்மானின் மியூசிக் அந்த வி.டி.வி. மேஜிக்கை இப்போதும் தருகிறது.