Skip to main content

எஸ்.பி.பியின் ஜிப்பாவை கிழித்த பாரதிராஜா! - பசுமையான நினைவுகளை பகிர்ந்த கங்கை அமரன்

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
spb with gangai amaran

 

 

நம் மனதில் நீங்காத இடம் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமனியத்தின் நெடுநாள் நண்பரான கங்கை அமரன், தனது ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ நூலில் பகிர்ந்த எஸ்.பி.பி குறித்த நினைவுகளில் ஒரு பகுதி...

 

”பாரதிராஜாண்ணனுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் ஜாலியான, கலாட்டாவான க்ளோஸ் நட்பு உண்டுங்கிறத நான் ஏற்கனவே  சொல்லியிருக்கேன். "சினிமாவுல நடிக்க, ட்ரை பண்றதவிட வேற லைனுக்கு ட்ரை பண்ணுடா பாரதி'னு பாஸ்கரண்ணன் சொன்னார். பாரதியும் சம்மதிச்சார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அஸிஸ்டெண்ட்டா இருந்த ராஜாண்ணனும், பாஸ்கரண்ணனும், "பாரதிய அஸிஸ்டெண்ட் டைரக்டரா சேர்த்துவிடுங்க'னு ஜி.கே.வி.கிட்ட சொல்ல... அவர் பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணா கனகல் கிட்ட சொல்ல... 

 

"இருளும்ஒளியும்'னு  அர்த்தம் வர்ற புட்டண்ணாவோட கன்னடப் படத்துல பாரதிராஜாண்ணன் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆனார். இது பற்றி நான் விரிவா ஏற்கனவே சொல்லீருக்கேன். இந்தப் படத்தில் எஸ்.பி.பி. பாடப் போனபோதுதான், எஸ்.பி.பிக்கும், பாரதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதையும் சொல்லீருக்கேன். அந்த நட்பு மூலம் எஸ்.பி.பி.யோட கச்சேரிகள்ல "பாவலர் பிரதர்ஸ்'ங்கிற பேர்ல நாங்க இசையமைச்ச அனுபவங்களையும்... அதன் மூலம்... பாரதிராஜா, இளையராஜா, பாஸ்கர்... பால சுப்பிரமணியம், நான்... ஆகியோர் "நட்பில் ஐவரானோம்'ங்கிறதையும் ஏற்கனவே  சொல்லியிருக்கேன். இந்தச் சமயம்.... தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தினு எஸ்.பி.பி., பெரிய பந்தாவுமில்லாம எங்க மியூஸிக் குரூப்ல வந்து கலந்துக்குவான். இப்பவெல்லாம் ரெண்டு பாட்டு பாடினாலே பெரிய ஆளுனு நினைச்சுக்கிறாங்க. பாலு அப்படி இல்ல. அதனாலதான் இவ்ளோ ஒசரத்துக்கு அவன் வளர்ந்து நிக்குறான். தி.நகர். வாணி மஹால்ல பாரதியண்ணன் ஹீரோவா நடிக்கிற நாடகம் ஏற்பாடாகியிருக்கு. நாடகத்துக்கு மொதஆளா வந்து உட்கார்ந்திட்டான் பாலு. "என்னடா...பாலு இம்புட்டு அக்கறயா வந்து  ஒக்காந்து நாடகம் பாக்குறான்?'’னு விசாரிச்சா... விபரம் தெரிய வருது. நாடகத்துல ஹீரோ பாரதி போட்டு நடிக்கிற ட்ரெஸ்ல ஒரு சர்ட்டும், ஜிப்பாவும் பாலுவோடது. நாடகம் முடிஞ்சதும் அதை வாங்கிட்டுப் போறதுக்காக வந்து உட்கார்ந்திருக்கான்னு தெரிஞ்சது. நாடகத்தோட க்ளைமாக்ஸ் நடந்துக்கிட்டிருக்கு. மேடையில பாலுவோட ஜிப்பாவ போட்டுக்கிட்டு பாரதியண்ணன் உணர்ச்சிகரமா பேசிக்கிட்டிருக்கார்.  ஜிப்பாவ வாங்கிட்டுப் போக பாலு கீழ உட்கார்ந்திருக்க.... அங்கதான் ட்விஸ்ட்டு. காட்சிப்படி... உணர்ச்சிகரமா பேசிக்கிட்டு... ரொம்ப எமோஷனலாகி... போட்டிருக்க ஜிப்பாவ பாரதி கிழிக்கணும். பாவம் பாலுவுக்கு இது தெரியாதுல்ல. பாரதி... ஆவேசமா தான் போட்டிருக்க ஜிப்பாவ கிழிக்க....  அதப்பார்த்து தலமேல ரெண்டு கையையும் வச்ச பாலு... "அய்யோ... நேத்துத்தான புதுசா வாங்கினேன் இந்த ஜிப்பாவ. ரொம்ப காஸ்ட்லி.... 200 ரூபாய்க்கு வாங்கித் தொலைச்சேனே... அத கிழிச்சுட்டானே பாவி....'னு பாலு கத்துனான். இப்படியெல்லாம் நட்புக்காக பல இழப்புகள  தாங்கீருக்கான் பாலு. சும்மா சொல்லக் கூடாது. ரொம்ப பாசக்காரப்பயதான்.”

இன்னும் பல மகிழ்ச்சியான, சுவாரசியமான நினைவுகளை, கிண்டிலில் படித்து மகிழுங்கள்... க்ளிக் செய்யுங்கள்...

pannaipuram

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாத பாட்டு எது?’ - கவிஞர் வைரமுத்து ருசிகரம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய அவர், ''பரத்வாஜ் கிளப் டான்ஸ் மாதிரி ஒரு பாட்டு கொடுங்க சார் என்றார். சும்மா வாய்மொழியாக சொன்னது 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்' இதெல்லாம் சரியா இருக்குமா என்று கேட்டேன். நல்லா இருக்கும் சார் என்று இசையமைத்து காண்பித்தார். எல்லாத்தையும் விட முக்கியமானது இந்திய சினிமா தோன்றி அதிகமான வரிகளால் பாடப்பட்ட பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்'. செஞ்சி மலை மீது அஜித் குமார் பாடிய பாட்டு; சரண் இயக்கிய பாட்டு; நான் எழுதிய பாட்டு 89 வரிகள் கொண்ட பாட்டு; எஸ்.பி.பி பாடிய பாட்டு.

 

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவரை தவிர யாரும் பாட முடியாது என்று நீங்கள் கருதுகின்ற பாட்டு எது என்று ஒரு தொலைக்காட்சி ட்விட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்தது இன்றைக்கு. நான் ஆச்சரியமாக புரட்டி பார்த்தேன். அதில் சொல்லப்பட்டிருக்கிற முதல் பாட்டு 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ அடுத்து 'சங்கீத ஜாதி முல்லை' அடுத்து 'அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி' அடுத்து 'என் காதலே என் காதலே' நான்கும் என் பாட்டு. இது ஆச்சரியமாக இருந்தது. அதில் முக்கியமான பாட்டு 89 வரிகள் கொண்ட 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டு. திரும்ப தமிழில் இப்படி ஒரு பாட்டு வரவே முடியாது. அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ்'' என்றார்.

 

 

Next Story

100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

PV SINDHU KANGANA RANAUT

 

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை வழங்கும் விழா, டெல்லியில் இன்று (08.11.2021) நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

 

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரணாவத், சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்பாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் 119 பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.