
சின்னத்திரை பெரியதிரை என கலக்கி வரும் குணச்சித்திர நடிகை தீபா படப்பிடிப்பிற்காக சென்ற இடத்தில் நடந்த சம்பவத்தை மையமிட்டு வருங்கால இளைய தலைமுறை ஆண்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் ஒரு கணவன் தன்னுடைய மனைவியைத் தெருவில் வைத்து அடித்த காட்சி வெளிவந்தது. தென் மாவட்டத்தில் நிறைய பெண்களின் நிலை இதுதான். கணவனுடைய கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் பலர் வாழ்ந்து வருகின்றனர். அப்படி யாராவது யாரையாவது அடிப்பதை நீங்கள் பார்த்தால், அந்தப் பெண்ணை உங்களுடைய சகோதரியாக நினைத்து அந்த ஆணை நீங்கள் ஒரு அடி அடிக்க வேண்டும்.
யாரும் யாரையும் அடித்து துன்புறுத்தாதீர்கள். அதற்காக எந்தத் தகப்பனும் பெண்ணை வளர்க்கவில்லை. உங்களுக்கு கடவுள் கொடுத்திருக்கும் பலம் என்பது பெண்களைக் காப்பதற்குத்தான். பெண்களுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கின்றன. திருமணம் ஆகிவிட்டால் ஆண்களுக்காக அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வருங்கால இளைஞர்கள் தங்களுடைய மனைவியை சமமாக நடத்த வேண்டும். இல்லையென்றால் திருமணமே செய்ய வேண்டாம். யாரும் யாரையும் நேசிக்கலாம். பெண்கள் பிடிக்கும் கை என்பது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.