ரன்பீர் கபூர் படப்பிடிப்பில் தீ விபத்து; பலர் படுகாயம், ஒருவர் மரணம்

fire accident; One person dies on Ranbir Kapoor, Shraddha Kapoor shoot spot

ரன்பீர் கபூர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த 'ஷம்ஷேரா' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. இதனை தொடர்ந்து அயன் முகர்ஜி இயக்கும் 'பிரம்மாஸ்திரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். நாகார்ஜுனா, அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே ரஞ்சனின் இயக்கத்தில் 'ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் ஃபிலிம்' தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர். இப்படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்க போனி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை, மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்ரகூட் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்தில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் பெரிதளவு கரும்புகை காணப்பட்டு புகைமண்டலமாக மாறியது. பின்பு தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் கொண்டு ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு சில பணியாளர்கள் காயமடைந்திருந்தாலும், ஒருவர் பலத்த காயமடைந்திருந்தார். காயமடைந்திருந்தவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இது படக்குழுவினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ரன்பிர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை திரும்பியுள்ளனர். மும்பையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது.

ranbir kapoor
இதையும் படியுங்கள்
Subscribe