நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, விடுதலை படத்திற்கு பிறகு நாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் ‘கொட்டுக்காளி’. இதில் மலையாள நடிகை அன்னாபென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தி லிட்டில் வேவ் புரொடெக்சன்ஸ் உடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்கு 'கொட்டுக்காளி' திரைப்படம் தேர்வாகி உள்ளது. இந்த விழாவில் பிரத்யேக திரையிடலுக்கு தேர்வாகி உள்ள முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 'கொட்டுக்காளி' பெற்றுள்ளது.
இந்த தகவலை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது “பேரன்புக்குரியவர்களுக்கு நமது "சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுங்கான பிரிவில் தேர்வாகி உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். இத்திரைப்படத்தை உலகத் தரத்தில் இயக்கியுள்ள இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி அண்ணன், அன்னாபென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுகளும்.
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ்த்திரைப்படம் நமது "கொட்டுக்காளி" என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இது போன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகம் அளித்து அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களுக்கே அனைத்து பெருமையும் சேரும்” என்றிருக்கிறார்.