லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளான இன்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திர உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு காட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் படத்தை வரவேற்று வரும் நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 20 அடி நீள கேக், பிரியாணி விருந்து என கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க பிரபலங்கள் லோகேஷ் கனகராஜ், அனிருத், மன்சூர் அலிகான், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, வைபவ் ஆகியோர் திரையரங்கிற்கு வருகை தந்தனர். மேலும் ஜப்பானில் இருந்து ரசிகர் ஒருவர் சென்னைக்கு வந்து படம் பார்க்கிறார்.
இதனிடையே சென்னையில் ஒரு திரையரங்கில், உள்ளே வைக்கப்பட்ட பேனரில் விஜய் புகை பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அந்த சிகரெட்டை மட்டும் கருப்பு மை கொண்டு அழித்தார், ஒரு ரசிகர். அவரது செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தின் முதல் பாடலாக வெளியான 'நா ரெடி...' பாடலில் விஜய் புகைபிடித்த காட்சி பெரும் சர்ச்சையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.