சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் வைரஸ் பரவல் தடுப்பதற்காக அந்நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் ரயான் ரெனால்ட்ஸும் அவரது மனைவியும் நடிகையுமான பிளேக் லைவ்லியும் இணைந்து கரோனா பாதிப்பிற்கு ரூ.7.42 கோடி நிதி கொடுத்துள்ளனர். பீடிங் அமெரிக்கா மற்றும் புட் பாங்க்ஸ் கனடா ஆகிய 2 அமைப்புகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.