
மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவு (01-06-25) மாரடைப்பால் உயிரிழந்தார்.
பிரபல மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். பொல்லாதவன், கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்த இவர், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான ‘ஆடுகளம்’ படத்தில் வசனம் எழுதியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநரான தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், 10 ஆண்டுகள் கழித்து சாந்தனுவை வைத்து ‘இராணுவக் கோட்டம்’ படத்தை இயக்கினார். இந்த நிலையில், நேற்று இரவு பேருந்தில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இன்று உயிரிழந்தார். இவரது மறைவு, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.