90-களில் வந்த தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சரண் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் படத்தயாரிப்பு, இயக்கம் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்துள்ளார்.
சில ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த சரண் ராஜ் தன் மகன் தேஜ் ராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதன் மூலம் திரைத்துறையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் சரண் ராஜ் இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம், எழுதியுள்ளார். காதல் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான அண்ணன் - தங்கச்சி படத்தில் சரண் ராஜ் நடித்தது மட்டுமின்றி, இயக்கியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.