Skip to main content

“பொய் சொல்லி என்னைக் கொல்லாதீர்கள்...”- பாடகி ஜானகி வேதனை!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

janaki


இந்தியா சினிமாவில் பழம் பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. இதுவரை 17 மொழிகளில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என்று இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

 

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சினிமாவில் இனி பாடுவதில்லை என்பதை அறிவித்துவிட்டு, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

 

இந்நிலையில் பாடகி ஜானகி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி நேற்று மதியம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஜானகியின் மகன் மற்றும் இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

 

இந்நிலையில் தனது ரசிகருடன் ஜானகி போனில் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், “எல்லாருமே ஃபோன் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை போன் தெரியுமா?. எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல, 6 ஆவது முறை. சும்மா தேவையில்லாமல் வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

http://onelink.to/nknapp

 

முன்னதாக இதே மாதிரி செய்தி வந்த போது வாட்ஸ்-அப்பில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம். இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்லா திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படிச் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இவர்களுக்கு பிரச்சனை உதயநிதி இல்லை; நூல் இல்லாம வந்துட்டானே என்பதுதான்..” - காந்தராஜ்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

kl

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீண்டகாலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சர் ஆனதிலிருந்தே அவரை குறிவைத்துத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்கள் குறித்து மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் கேட்டபோது, "தமிழக அரசியலில் உதயநிதி மட்டும்தான் வாரிசாக அரசியலுக்கு வந்துள்ளாரா? இந்திய அரசியலிலோ அல்லது தமிழக அரசியலிலோ வாரிசு என்று யாருமே இதுவரை இருந்தது இல்லையா? புதிதாக இவர் மட்டும்தான் அரசியலுக்கு வந்திருக்கிறாரா என்பதை, அவரை விமர்சனம் செய்பவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். 

 

அதிமுகவை முதலில் யார் ஆரம்பித்தார்கள், எம்ஜிஆர் தானே. அவருக்குப் பிறகு தமிழக முதல்வராக யார் வந்தார்கள், ஜானகி. அவருக்குப் பிறகு அதிமுகவில் யார் முதல்வராக வந்தார்கள், ஜெயலலிதா. இவர்கள் இருவரும் யார்? அதிமுகவில் பல ஆண்டுக்காலம் உறுப்பினராக இருந்தவர்களா? ஜானகி அதிமுகவின் உறுப்பினராக இத்தனை ஆண்டுக்காலம் இருந்துள்ளார்; அதைப்போல ஜெயலலிதாவும் இத்தனை ஆண்டுக்காலம் அதிமுகவின் உறுப்பினராக இருந்த பிறகே முதல்வர் பதவிக்கு வந்ததாக ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள். கட்சிக்கு வந்த மூன்றே வருடத்தில் ஜெயலலிதா நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார். வீட்டிலிருந்த ஜானகி நாட்டின் முதலமைச்சர் ஆகிறார். அப்போது வராத வாரிசு அரசியல், உதயநிதி வந்தால் வருகிறதா? 

 

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வாரிசு அரசியல் உச்சத்திலிருந்து வருகிறது. ஆனால், அதைப்பற்றி அங்கே யாரும் விமர்சனம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் எந்தக் கட்சியில் வாரிசுகள் பதவியில் இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள். காங்கிரஸ், பாஜக, ஆந்திரா என இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாரிசு அரசியல் இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது. அரசியலுக்கு வந்த பிறகு அவரின் திறமைகளின் அடிப்படையில் அவர்களை விமர்சனம் செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் வருவதே தவறு என்றால், அவர்களின் நோக்கம் தனிப்பட்ட வெறுப்பாக இருக்குமே தவிர அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. இவர்களின் நோக்கம் முழுவதும் உதயநிதி அமைச்சரானதில் இல்லை. நூல் இல்லாத ஒருவன் அரசியல் களத்திற்கு மீண்டும் வந்துவிட்டானே என்ற ஆற்றாமையே அவர்களை இப்படிப் பேச வைக்கிறது" என்றார்.

 

 

Next Story

எம்.ஜி.ஆர் மேல் எங்க அப்பா போட்ட கேஸ்! - ரமேஷ் கண்ணா

Published on 24/12/2020 | Edited on 24/12/2020
ramesh kanna

 

90களில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகரும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அத்தனை முன்னனி நடிகர்களுடனும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவருமான ரமேஷ் கண்ணா எம்.ஜி.ஆரின் குடும்பத்துக்கும் தனது குடும்பத்துக்குமான உறவை, தொடர்பை தனது 'ப்ரண்ட்ஸ்' புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பகுதி இங்கே...

 

”எங்க அப்பா நாராயணன், பாம்பே ஜெனரல் மோட்டார்ஸ்ல ஜெனரல் மேனேஜரா இருந்தாரு. வி.என்.ஜானகியுடைய அம்மாவான நாராயணி அம்மா, எங்க அப்பாவுக்கு சகோதரி. அவுங்க, என் அப்பாவைக் கூப்பிட்டு, "டேய் நாராயணா, இவ சினிமாவுல நடிக்க ரொம்ப ஆசைப்படுறா. நீ இவளுக்கு ஏதாவது பண்ணு, இவளைக் கூட்டிட்டுப் போ"னு சொல்லவும் எங்க அப்பா, பாம்பேயில தன் வேலையை விட்டுட்டு சென்னையில் வி.என். ஜானகி கூட இருந்து, சினிமா வாய்ப்புக்காக பல பேரைப் பார்த்து, ஒவ்வொரு படத்தின் போதும் கூட இருந்து உதவியா இருந்தாரு. ஜானகிக்கு முதல் திருமணமாகி, அது இருவருக்கும் ஒத்து வராம பிரிஞ்சது இன்னொரு கதை. அப்போ புகழ் பெற்ற இசையமைப்பாளரா இருந்த பாபநாசம் சிவன், எங்க அப்பாவுக்கு உறவு. வி.என். ஜானகிக்கும் அவர் பெரியப்பா முறை வேணும்.

 

mgr family

எங்க வீட்டில் இருக்கும் எம்.ஜி.ஆர் குடும்பப் படம் - எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகியுடன் அவரது மகன் சுரேந்திரன்

 

எங்க அப்பா அவுங்க கூட இருந்தப்போ 'ராஜமுக்தி' பட வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பு பிரச்சனையையும் கூட்டிகிட்டு வருதுன்னு இவங்களுக்குத் தெரியாது. தியாகராஜ பாகவதர் நடிச்ச அந்தப் படத்துல வி.என். ஜானகிதான் ஹீரோயின். எம்.ஜி.ஆர் அதுல ஒரு வேடத்துல நடிச்சாரு. அப்போ அவரு சிறிய கதாபாத்திரங்கள்தான் பண்ணிக்கிட்டு இருந்தார். இந்தப் பட ஷூட்டிங்கின் போது, எம்.ஜி.ஆர்க்கும்  வி.என். ஜானகிக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, காதலானது. ஆனால், எம்.ஜி.ஆரோ ஏற்கனவே திருமணமானவர். இவங்களோட காதல் விஷயம் தெரிஞ்சு எங்க அப்பா கோபமாகிட்டாரு. ஜானகி வீட்டிலும் இது பிரச்சனை ஆச்சு. எம்.ஜி.ஆர் அப்போ சின்ன நடிகர், ஏற்கனவே திருமணம் ஆனவர். ஜானகி,  பிரபலமாகியிருந்தாங்க. அவரின் புகழுக்கும் பணத்துக்கும்தான் எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டாரென்று எங்க அப்பா அப்போ நினைத்தார்.

 

அவர்களிருவரும் திருமணமும் செஞ்சுக்கிட்டாங்க. ஆனா, அது சட்டப்பூர்வமாக செல்லாது. எங்க அப்பா அவங்க திருமணத்தை எதிர்த்து  கோர்ட்ல கேஸ் போட்டாரு, கேசும் ஜெயிச்சது. ஆனாலும் அவர்கள் பிரியல. அவர்கள் திருமணமும் ரொம்ப நாள் கழிச்சுத்தான் சட்டபூர்வமாச்சு. அப்புறம்தான் எங்க அப்பாக்கு அவுங்க காதல் புரிஞ்சது. ஆனா, அப்பாவுக்கும் ஜானகிக்குமான உறவு தூரமாகிடுச்சு. பின்னாடி ரொம்ப நாள் கழிச்சு, எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமாக இறங்கி, முதல்வரான பின், அப்போ அந்த கேஸ்ல எங்கப்பாவே கோர்ட்ல வாதாடியதை நினைவு வைத்து சொல்லியிருக்கார், "நாராயணனை சட்ட அமைச்சர் ஆகிடலாமா? அவருக்கு எல்லா விவரமும் தெரியுது" என்று. ஆனால், வி.என்.ஜானகி அதுக்கு ஒத்துக்கலை. இப்படி, உறவு விலகியிருந்தாலும் பின்னாடி, என் சித்தி பொண்ணு, அதாவது என் தங்கையை வி.என்.ஜானகி மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். 'திருமலை'ல விஜய் சொன்ன மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம்தான், இல்ல?

 

ஆனால், நான் இந்த உறவு விஷயங்களை சினிமாவுல யார்கிட்டயும் சொல்லிக்கிட்டது இல்லை. இப்போதான் பகிர்கிறேன். அதுவும் சத்யராஜ்க்கு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான். வி.என்.ஜானகியின் சகோதரர் பையன் தீபன் வீட்டு திருமணத்திற்கு போயிருந்தப்போ சத்யராஜும் வந்திருந்தார். அப்போ தீபன் சத்யராஜ்கிட்ட, "இவரு யார் தெரியுமா?"னு என்னைக் காட்டி கேக்குறாரு. சத்யராஜ் சிரிச்சுக்கிட்டே, "இவரைத் தெரியாதா, ரமேஷ் கண்ணா. நாங்க மகாநடிகன் படத்துல ஒண்ணா நடிச்சிருக்கோமே"னு சொல்றாரு. "உங்களுக்குத் தெரிஞ்ச ரமேஷ் கண்ணா வேற... எங்க குடும்பத்துக்கு ஒரே தாய்மாமன் இவருதான்"னு தீபன் சொல்ல, சத்யராஜ்க்கு ஒரே ஆச்சரியம். அவரு நடிகர் ராஜேஷ்கிட்ட சொல்ல, அப்புறம் அப்படியே சினிமால பலருக்கும் தெரிஞ்சுது.” 

 

இது போல ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ் என பலருடனான தனது இனிய, சுவாரசியமான அனுபவங்களை, தமிழ் சினிமா குறித்த பல கதைகளை அந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். புத்தகத்தை அமேசான் கிண்டிலில் படிக்கலாம்...  க்ளிக் செய்யுங்கள்...

ramesh kanna book

புத்தகத்தை ஆர்டர் செய்து வீட்டில் பெற... க்ளிக் செய்யுங்கள்...

ramesh kanna books