அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். செம்மர மரம் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டஇப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை படக்குழு அடுத்தாண்டுவெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகமும்வெளியாகும் என ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஃபகத், “முதலில் புஷ்பா படத்தின் கதையை வெப் சீரியஸாக எடுக்கத்தான் இயக்குநர் திட்டமிட்டிருந்தார். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார். முதலில் என்னிடம் கதை சொல்லும் போது ’புஷ்பா 2’ எடுக்கும் எண்ணம் எல்லாம் இயக்குநர் சுகுமாருக்கு இல்லை. என்னை வைத்து காவல் நிலைய காட்சிகளைபடமாக்கிய பின்புதான் அவருக்கு புஷ்பா 2 எடுக்கும் எண்ணம் உதித்தது. சமீபத்தில் இயக்குநருடன் பேசும் போது புஷ்பா படத்தின் கதை அதிகம் இருப்பதாலும், செம்மரக் கடத்தலை மிக ஆழமாக சொல்ல இருப்பதாலும்புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்திற்கு தயாராக இருங்கள் என கூறினார்” என்று தெரிவித்தார்.