உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,405 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்தைக் கடக்கவுள்ள நிலையில் 68 பேர் இந்தத் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.இதனிடையே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தினக் கூலித் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் எக்தா கபூர் தினக் கூலித் தொழிலாளர்களுக்குத் தன்னுடைய ஓராண்டு சம்பளத்தை நிதியாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள எக்தா கபூர், “கரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது.யாரும் இதற்கு முன்பு கண்டிராதது.நம் நாடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களின் துயரத்தைத் துடைக்க நாம் அனைவரும் ஏதாவது செய்தாக வேண்டும்.பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தினக்கூலிப் பணியாளர்களின் நலனைக் கவனத்தில் கொள்வது என் முழு முதல் பொறுப்பாகும்.படப்பிடிப்புகள் இல்லாத இந்தச் சூழலில் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள்தான்.
பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் என்னுடைய சக தொழிலாளிகள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்படாமல் இருக்க என்னுடைய ஓராண்டு சம்பளமான ரூ. 2.5 கோடியை வழங்குகிறேன். ஒற்றுமையே முன்னோக்கிச் செல்வதற்கான வழி.பாதுகாப்பாய் இருப்போம். ஆரோக்கியத்துடன் இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.