Skip to main content

"அவரிடமிருந்து எனக்கு 17 மிஸ்டு கால் வந்தது" - 'சார்பட்டா' நடிகை சிலிர்ப்பு!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

bdbdsbs


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பட்டா பரம்பரை' படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி, மாபெரும் வெற்றிபெற்றது. ஆர்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தில், நாயகியாக துஷாரா விஜயன் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில், நடிகை துஷாரா விஜயன் ‘சார்பட்டா’ படத்தில் நடித்தது குறித்து பேசியபோது....

 

"ரசிகர்களிடையே ‘சார்பட்டா’ படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களுக்கு நான் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அது ‘சார்பட்டா’ படத்தில் நடந்துள்ளது. ரஞ்சித் சார் ஆஃபீஸில் இருந்து எனக்கு ஃபோன் வந்தபோது, முதலில் நான் யாரோ என்னை பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து நிராகரித்துவிட்டேன். அதன் பின் அந்த எண்ணிலிருந்து 17 மிஸ்டு கால் வந்தது. பிறகு நான் விசாரிக்கையில்தான் தெரிந்தது, மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என்று. நான் உடனடியாக ரஞ்சித் சார் ஆஃபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் ரஞ்சித் சார் மிகவும் பணிவாக அதை ஏற்றுக்கொண்டு, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார். ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார். அவருக்கு நான் இந்தப் பாத்திரத்தை செய்துவிடுவேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஃபோட்டோஷூட் நடத்திய பிறகு, இந்தக் கதாபாத்திரத்தில் நான் அழகாக பொருந்தியிருப்பதாக நம்பினார். 

 

brshrsdhdsr

 

இந்தப் படம் முடிந்து வெளியான பின்னரும், இன்னும் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. நான் இவ்வளவு வருடங்களாக காத்திருந்த வெற்றி, இந்த ‘சார்பட்டா’ படத்தில் எனக்கு அமைந்தது. ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். நான் அவரைப் பற்றி வெளியில் கேள்விபட்டதற்கு முற்றிலும் மாறாக இருந்தார். அவர் மிகவும் கலகலப்பாக இருப்பார். ஷுட்டிங் ஸ்பாட்டில் எல்லோருடனும் சேர்ந்து பேசி அரட்டையடித்துக்கொண்டிருப்பர் என்று கேள்விபட்டேன். ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவும், சீரியஸாகவும் இருந்தார். ஏனெனில் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றவரிடமிருந்து விலகியே இருக்கும். அதற்காகத்தான் அப்படி இருந்தார் என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். இயக்குநர் ரஞ்சித் அவர்கள் கூட அவரை இயல்பாக இருக்கும்படி கேட்டார். ஆனால் அவருடைய கபிலன் கதாபாத்திரத்தைவிட்டு சிறிதளவும் வெளியே செல்லாமல் தன்னை பார்த்துக்கொண்டார். அவரது உழைப்பு பிரமிப்பானது. அனைவரும் மாரியம்மாளை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது" என்றார்.

 

இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்த பாலன் இயக்கதில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை துஷாரா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இலக்கை அடைந்த தருணம்...” - துஷாரா விஜயன் பெருமிதம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
dhushara vijayan about raayan movie and dhanush

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவுப் படம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளதாகப் படக்குழு அவர்களது கதாபாத்திர லுக் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு உறுதி செய்தது. இதையடுத்து பிரகாஷ் ராஜ் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், துஷாரா விஜயன் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக துஷாரா விஜயன், “இந்த படம் எனக்கு ஒரு கிஃப்ட். கனவு நனவான தருணம் என்று சொல்வதை விட இலக்கை அடைந்த தருணமாகத்தான் நான் பார்க்கிறேன். தனுஷ் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் இயக்கத்தில் நடித்ததை தாண்டி அவருடன் நடிப்பதை கூடுதல் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“அழகாக இருக்கிறது” - துஷாரா விஜயன் நன்றி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

dushara vijayan thanks note for aneethi response

 

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் 'அநீதி'. இப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

 

இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன், இந்த படத்திற்காக கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு சவால் நிறைந்த மற்றும் ஒரு கலைஞனாக எனது வளர்ச்சிக்கு உதவும் கதாபாத்திரங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் திரையுலகில் எனது பயணத்தைத் தொடங்கினேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, புதிய களங்களை ஆராயவும், புதிய கதாபாத்திரங்களில் வாழவும், அவர்களின் கதைகளுக்கு உயிர் கொடுக்கவும் எனக்கு சில அற்புதமான வாய்ப்புகள் கிடைத்தது. 

 

அந்த வகையில் இன்னொரு நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் அநீதி படத்தில் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. அதனை மக்கள் பாராட்டுவதை பார்க்கும் போது அழகாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் "அனைவரின் ஆதரவும் ஊக்கமும் என்னை மேலும் கடினமாக உழைக்கவும் எதிர்காலத்தில் இன்னும் சிறந்த நடிப்பை கொடுக்கவும் தூண்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.