
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வலம் வருபவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019ஆம் வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்தார். இப்படத்தில், மாரியம்மா கதாபாத்திரத்தில் தனது அபரிவிதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் துஷாரா விஜயன். அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக துஷாரா விஜயன் பார்க்கப்பட்டார்.
சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றியிருந்தாலும், அவர் ஏற்றியிருந்த ரெனே கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு, ‘கழுவேத்தி மூர்க்கன்’, அநீதி ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்திலும், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘வேட்டையன்’ படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும், ‘வீர தீர சூரன்’ படத்தில் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
துஷாரா விஜயன் நடிப்பில் வருகிற ஜூலை 26ஆம் தேதி வெளியாகவிருக்கும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விழா முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா விஜயன், “என்னுடைய 35 வயதில் நான் திரையுலகில் இருந்து விலகிவிடுவேன். அதன் பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பிறகு, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.