
தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மான் கடைசியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்தார். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியில் 'சுப்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனிடையே வேஃபரர் பிலிம்ஸ் (Wayfarer Films) என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பிசியாக படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான் தற்போது 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியில் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம், கைட்ஸ் அறக்கட்டளை மற்றும் ஆஸ்டர் மெட்சிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. துல்கர் சல்மானின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பல முன்னணி திரைப் பிரபலங்களான ஷாருக்கான், சல்மான் கான், சூர்யா எனத் தொடங்கி ஹன்சிகா வரை குழந்தைகள் சம்பந்தமான பல விஷயங்களில் உதவிகளைச் செய்து வருகின்றனர். இதில் ஆதரவற்றோர் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது, கல்விச் செலவுகளை ஏற்பது, மருத்துவ சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட பல உதவிகள் அடங்கும். இது போன்று உதவுகின்ற பிரபலங்களை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.