drm salem regret for parthiban complaint

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் தொடர்ந்து படங்களின் அப்டேட், அவ்வபோது சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து தனது கருத்தை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் வந்தே பாரத் இரயிலில் உணவு சரியில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை கமெண்ட் செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை .

பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் கம்ப்ளைன்ட் புக்-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென” என குறிப்பிட்ட்டார். மேலும் அவர் புகார் கொடுத்த கடிதத்தையும் பகிர்ந்தார். அதில், “உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ட்ரையினும் சுத்தமாக இருந்தது. ஆனால் இரவு உணவு மற்றும் சிக்கன் மிக மோசமாக இருந்தது. உணவுக்காக பெரும் தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்யம் அவசியம்” என குறிப்பிட்டார்.

Advertisment

இந்த நிலையில் இரயில்வே நிர்வாகம் பார்த்திபன் புகாருக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. பார்த்திபனின் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள சேலம் இரயில்வே கோட்ட மேலாளர், “அசௌகரியம் ஏற்பட்டதற்கு வருந்துகிறோம். சேவை குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப் படுகிறது. உணவின் தரத்தை மேம்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும்” என பதிவிட்டுள்ளார்.