Skip to main content

“மிரட்டுவதை விட இரக்கம் காட்டுங்கள்...” -திவ்யா ஸ்பந்தனா காட்டம்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
divya spandana

 

 

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்த சுசாந்த் சிங்கின் மரணத்திற்கு பின்பு நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்று சர்ச்சையை கிளப்பினார்.

 

இதனை தொடர்ந்து கங்கனாவின் பதிவுகளுக்கு பல பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை திவ்யா ஸ்பந்தனா இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

 

அதில், “கங்கனா, போதை மருந்து பழக்கத்தை ஒழிக்க நிஜமாகவே எதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், போதை மருந்துக்கு எதிரான போராளியாக மாறுங்கள்.

 

ஒரு வீடியோவில் நீங்கள் போதைமருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக சொல்லியிருந்தீர்கள், நீங்கள் தைரியம் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் பற்றி, எப்படி அதிலிருந்து மீண்டீர்கள் என்பது பற்றி, ஏன் போதை மருந்துகள் தவறு என்பதை பற்றி பேசுங்கள், சஞ்ஜய் தத் அதைச் செய்துள்ளார்.

 

நிஜமாகவே ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்றால் உங்கள் சக நடிகை தீபிகா படுகோனைப் போல் இருங்கள். அவர் மனநலம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மன அழுத்தம் குறித்த அவரது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

நீங்கள் பேசி வரும் விதத்தை பார்க்கும்போது உங்கள் நோக்கம் தவறாக இருப்பதாக தெரிகிறது. பெயரைச் சொல்லி வெளிப்படுத்துவேன் என்று மிரட்டுவதை விட இரக்கம் காட்டுங்கள், அவர்களுக்கு ஆலோசனை கொடுங்கள்.

 

உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பியுங்கள். போதை மருந்து பழக்கம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையின் அழகும், இன்பமும் தெரிவதில்லை. நீங்கள் ஒரு ஆன்மிகவாதி, உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.

 

அவர்களை வெளிப்படுத்துவதே சிறந்தது என்று நினைத்தால், அதை செய்யுங்கள். காவல்துறையிடம் செல்லுங்கள். அவர்களிடம் ஆதாரத்தை கொடுங்கள். அவர்களின் வேலையை அவர்கள் செய்யட்டும்.

 

இந்த தீய செயல்களைத் தடுக்க போதை மருந்து தடுப்பு பிரிவினருக்கு அது பெரிதும் உதவும். நீங்கள் எதை செய்தாலும் நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள், வஞ்சத்தோடு அல்ல. கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் நம்மிடமிருந்து தான் துவங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்