Skip to main content

தல - தளபதி... இருவரையும் டீல் செய்த இயக்குனர்கள்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020


 

ajith vijay


தமிழ்ச் சமூக ஊடகத்தில் நிலவும் பல விஷயங்கள் திடீரென ட்ரெண்டிங் ஆகும், பின் தானே அடங்கும். பல விவாதங்கள் புயலாய் எழும், பின் ஓயும். ஆனால், எப்போதும் ஓயாத பிரச்னை என்றால் விஜய், அஜித் ரைவல்ரிதான்.

 

விஜய், அஜித் இருவருக்கும் தனித்தனியே நெருக்கமான, ஃபேவரிட் இயக்குனர்கள் என்று சிவா, விஷ்னுவர்தன், அட்லீ போன்ற சிலர் இருக்கின்றனர். அதே நேரம் விஜய், அஜித் இருவரையும் வைத்து படங்களை இயக்கியவர்களும் இருக்கின்றனர்.

 

வசந்த் 



1995ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ’ஆசை’ என்றொரு படத்தை இயக்கினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யாவை வைத்து ’நேருக்கு நேர்’ என்றொரு படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் மூலம்தான் சூர்யா சினிமாவிற்கு அறிமுகமாகினார். முதலில் இந்தப் படத்தில் அஜித்தான் நடிப்பதாக இருந்தது. ஒருவேளை அது நடந்திருந்தால், இருவரும் இணைந்து நடித்த வெற்றிப் படமாக அது இருந்திருக்கும். எப்படியோ வசந்த் அஜித், விஜய்யை வைத்த இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படங்கள்தான்.

 

விக்ரமன்

 

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ’பூவே உனக்காக’ என்னும் படத்தின் மூலம் முதல் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் விக்ரமன். இவரது இயக்கத்தில் அஜித் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' என்னும் படத்தில் நடித்திருந்தார். இதில் ஹீரோ ரோலாக இல்லாமல் கெஸ்ட் அப்யரன்ஸ் கொடுத்தார் அஜித்.

 

எஸ்.ஜே. சூர்யா

 

அஜித்திற்கு ஒரு டபுள் டமாக்கா வெற்றி என்றுதான் 'வாலி' படத்தின் வெற்றியைச் சொல்ல வேண்டும். ஆமாம், அஜித் இரு வேடங்களில், அதுவும் ஹீரோவும் அவரே வில்லனும் அவரே என்று முதல் முயற்சியில் வெற்றியைத் தழுவினார். அதற்கு வித்திட்டவர் எஸ்.ஜே. சூர்யாதான். இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படமே விஜய்யை கமிட் செய்து 'குஷி' என்னும் படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. இதுவும் வேற லெவல் வெற்றிதான்.

 

ஏ.ஆர். முருகதாஸ்

 

அஜித்தை வைத்து 'தீனா' படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுதான் முருகதாஸுக்கு முதல் படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' என்று மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் சர்காரை தவிர மற்ற இரண்டும் பிளாக்பஸ்டர் வெற்றி.

 

எழில் 

 

விஜய்யை வைத்து தன்னுடைய முதல் படமான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தை இயக்கினார். இது பெரிய வெற்றி பெற்றது. அஜித்தை வைத்து ’பூவெல்லாம் உன் வாசம்’, ’ராஜா’ என்று இரண்டு படங்களை இயக்கினார். இதில் ’பூவெல்லாம் உன் வாசம்’ படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

 

கே.எஸ். ரவிக்குமார்

 

விஜய்யை வைத்து ’மின்சாரக்கண்ணா’ என்றொரு படத்தை இயக்கினர் கே.எஸ்.ரவிக்குமார். ’படையப்பா’ மாபெரும் வெற்றி, விஜய்க்கும் அப்போது தொடர் வெற்றி என்பதால் ’மின்சாரக்கண்ணா’ படத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி தோல்வியடைந்தது. ’வில்லன்’, ’வரலாறு’ என்று இரண்டு படங்களை அஜித்தை வைத்து இயக்கினார். இதில் வில்லன் படம் வெற்றி, வரலாறு படம் பல தடைகளுக்குப் பின்னர் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

 

rajavin parvaiyile

 

 

பேரரசு

 

விஜய்யை வைத்து ’திருப்பாச்சி’, ’சிவகாசி’ என்று இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியவர் பேரரசு. இதனையடுத்து ’திருப்பதி’ என்று படத்தை அஜித்தை வைத்து இயக்கினார். இந்த படம் நூறு நாட்கள் ஓடினாலும் விஜய்க்கு அவர் கொடுத்த வெற்றியை போல் வரவில்லை.

 

ஏ.எல்.விஜய்

 

அஜித்தை வைத்து ’கிரீடம்’ என்னும் படத்தை இயக்கினார் ஏ.எல்.விஜய். இதுதான் இவருடைய முதல் படம். மோகன்லால் நடிப்பில் ’கிரீடம்’ என்று மலையாளத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. ஆனால் அஜித் நடிப்பில் வெளியான ’கிரீடம்’ வெற்றிபெறவில்லை. அதைப் போல விஜய்யை வைத்து இயக்கிய ’தலைவா’ பல தடைகளுக்குப் பின்னர் வெளியானது. ஆனால், இதுவும் எதிர்பார்த்ததுபோன்று ஓடவில்லை.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள்தான் விஜய், அஜித் இருவரையும் இயக்கியவர்கள். இவர்கள் அனைவரையும் விடச் சிறப்பைப் பெற்றவர் ஜானகி சௌந்தர். விஜய், அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்கியவர். ‘ராஜாவின் பார்வையிலே’தான் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம். இப்படம் வெற்றி பெறவில்லை.

 

முன்பெல்லாம் விஜய், அஜித் படங்களில் ஒருவரை ஒருவர் தாக்குவதுபோல பஞ்ச் வசங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அதே காலகட்டத்தில் இவர்கள் விஜய் அஜித்தை வைத்து படங்கள் இயக்கியிருந்தாலும் இவர்களது படங்களில் பெரும்பாலும் ரைவல்ரி வசனங்கள் இருக்காது. இந்த இயக்குனர்களைப் போல தற்போது விஜய், அஜித் இருவரில் ஒருவரது ஃபேவரிட் இயக்குனராக இருப்பவர்கள் மற்றவரை வைத்துப் படம் இயக்குவார்களா என்பதையும் அப்படி இயக்கினால் படம் எப்படி இருக்கும் என்பதையும் காண ஆவலாகத்தான் இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.