இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வசந்த் ‘ஜெய் பீம்’ படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "அன்புள்ள சூர்யாவுக்கு, முதல் வரிசை நட்சத்திரங்கள் நடிக்கும்போதுதான் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய திரைப்படங்கள் முக்கிய கவனம் பெறுகிறது. நல்ல படம் எடுக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் எடுக்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள், கோடிகளில் வியாபாரம், சமூக வலைத்தளத்திலும் சமூகத்திலும் லட்சக்கணக்கில் பின்தொடரும் ரசிகர்கள் இத்தனை போரையும் எப்போதும் திருப்தி படுத்த வேண்டிய கட்டாயம். இவை அனைத்தையும் தாண்டி, நான் நல்ல படத்தில் நடிப்பேன்... நான் நல்ல படத்தில் தான் நடிப்பேன்... நான் நல்ல படம் தான் எடுப்பேன் என்ற உங்கள் பிடிவாதத்திற்கு கிடைத்த வெற்றி இது. படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். ‘ஜெய் பீம்’ உங்கள் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல்" என தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் "தங்கள் வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.