Skip to main content

விமலுக்கு கன்னிராசியால் ஏற்பட்ட விபரீதம் 

Published on 17/02/2018 | Edited on 19/02/2018
vimal


மன்னர் வகையறா படத்தை தொடர்ந்து நடிகர் விமல் ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் பி.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியான நிலையில் இப்படத்தின் இயக்குனர் எஸ்.முத்துக்குமரன் படத்தை பற்றி பேசும்போது...."படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் நிலையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்" என்றார் இயக்குனர் எஸ்.முத்துக்குமரன்.

சார்ந்த செய்திகள்

Next Story

விமலின் கன்னிராசி படத்திற்கு தடை! 

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
vimal

 

 

விமல் - வரலட்சுமி நடித்து, இன்று வெளியாகவிருந்த படம் கன்னிராசி. இப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவிற்கான விநியோகஸ்த உரிமையை, மீடியா டைம்ஸ் என்ற நிறுவனம் 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 

 

இந்தநிலையில் மீடியா டைம்ஸ் நிறுவனம், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், கன்னிராசி படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் விநியோக உரிமையை, தாங்கள் 17 லட்ச ரூபாய்க்கு வங்கியுள்ளதாகவும், விநியோக உரிமையை வாங்கும்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2018 ஆம் ஆண்டுக்குள் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவில்லை எனவும் கூறியுள்ள அந்த நிறுவனம், தற்போது கன்னிராசி படத்தின் விநியோக உரிமையை, தயாரிப்பாளர் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும், எனவே தங்களிடம் பெறப்பட்ட 17 லட்ச ரூபாயை வட்டியோடு சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரமாக வழங்கவேண்டும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டுமென கோரியிருந்தது.

 

இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், கன்னிராசி படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்க, கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஷாமின் இப்ராஹிம் வரும் டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

 

  

Next Story

மேடையில் ரஜினியை கிண்டல் செய்த யுகபாரதி!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

விமல் - வரலக்ஷ்மி இணைந்து நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். 'தர்மபிரபு' புகழ் எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் யுகபாரதி கலந்துக் கொண்டு ரஜினி கருத்து குறித்து பேசியபோது....

 

yugabharathi

 

‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இந்த படத்தை பொறுத்தவரை சொல்வதற்கு நிறைய உள்ளது. ஆனால் இதையெல்லாம் சொல்லமுடியாத சூழலில் தற்போது தமிழ் சினிமா உள்ளது. இப்படத்தில் வரும் கொலு பாடலில் சிலைகளுக்கு நடுவே பெரியார் சிலையை இயக்குனர் முத்துக்குமார் வைத்துள்ளார். அவருடைய நோக்கம் என்ன என்பது இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பேசியதற்கும், விஜய் சேதுபதி பேசியதற்கும் அர்த்தமாக இது பார்க்கப்படுகிறது. இதுதான் இப்படத்தினுடைய முக்கியமான அம்சம். விமல், வரலக்ஷ்மி அல்லது முத்துக்குமார் ஆகியோரில் ஒருவர் விஜய் சேதுபதி பேசியது மாதிரியான கருத்தை பேசுவார்கள் என நம்புகிறேன். முத்துக்குமார் ஏற்கனவே தர்மபிரபுவில் இம்மாதிரியான கருத்துக்களை பேசி நிறைய பேச்சக்களை வாங்கியுள்ளார். 

 

 

இது முழுக்க முழுக்க குடும்பப் பாங்கான காமெடி திரைப்படம். இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற உயரிய கருத்தைச் மக்களுக்கு சொல்லிருக்கிறார். நான் இந்த நேரத்தில் இது மிக சிறந்த படம். இதற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால், நீங்கள் ஆகச்சிறந்த படங்கள் எடுத்தாலும் நிச்சயமாக இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது. இன்றைய சூழல் அப்படி. எனவே தயாரிப்பளார்களும், இயக்குனர்களும் இதுபோன்ற வெற்றிபெறக்கூடிய நல்ல காமெடி படங்களை எடுத்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேசிய விருதில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும். அதேபோல் எல்லோரும் சொல்லவேண்டும், நாம் கிருஷ்ணர், அர்ஜுனரை பற்றி பேசாமல் தமிழ் திரையுலகிற்கு எதாவது நல்லது நடக்கவேண்டும் என்பதற்காக முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள், தமிழ் திரையுலகை காக்க நினைப்பவர்கள் உட்பட அனைவரும் இந்த தேசியவிருது அறிவிப்பு குறித்த விழிப்புணர்வை பற்றி பேசவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார். சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி மேடையில் பேசும்போது... 'மோடி, அமித்ஷாவை கிருஷ்ணன், அர்ஜுனன்' என பாராட்டியது குறிப்பிடத்தக்கது.